
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
முத்துசாமி தீட்சிதருக்கு கற்கண்டை ஊட்டி இசை ஞானம் அளித்த திருத்தணி முருகன்
இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர்,அரிதான அதிகம் பாடப்படாத ராகங்களில் கூட பாடல்கள் இயற்றும் திறமை பெற்றவர். இவர் 1776 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்தார். வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முருகப்பெருமனின் திருநாமம் முத்துக்குமாரசுவாமி. அவருடைய அருளால் பிறந்த குழந்தை என்பதால் முத்துசுவாமி என பெற்றோர் பெயரிட்டனர்.
இவர் தன் தந்தையைப் போலவே வேதங்களிலும் மந்திர ஜபங்களிலும் சகல சாஸ்திரங்களிலும் வல்லவராக இருந்தார். தந்தையே இவருக்கு முதல் குரு. இனிமையாகப் பாடுவதிலும், வீணை வாசிப்பதிலும் தனித் திறமையுடன் விளங்கினார். சிதம்பரநாத யோகி என்பவரிடம் ஸ்ரீவித்யா மகாமந்திரத்தை தீட்சையாகப் பெற்று, தினமும் உச்சாடனம் செய்து வந்தார். பிறகு தன் குருவுடனேயே காசிக்குச் சென்றார். அங்கே கங்கை நதியில் இவருக்கு ஒரு வீணை கிடைத்தது. காசியில் கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி சங்கீதமும் பயின்றார்.
காசியிலிருந்து திரும்பி குருவின் உத்தரவுப்படி திருத்தணி சென்று முருகப்பெருமானை தரிசித்தார். திருத்தணி மலையேறும்போது ஒரு கிழவர் எதிரில் வந்தார். முத்துசாமியை வாயைத் திறக்கச் சொல்லி, கற்கண்டை ஊட்டி விட்டு உடனேயே மயில் வாகனத்தில் இருக்கும் முருகப்பெருமானாகக் காட்சியளித்தார். திருத்தணி முருகனை கண் குளிர தரிசித்தார் முத்துசுவாமி தீட்சிதர். இந்த தரிசனத்திற்குப் பின் தன்னுடைய முதல் கிருதியை இயற்றினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைக¬ளை இயற்றினார். அவருடைய பாடல்களில் அவருடைய முத்திரையாக, இறுதியில் குருகுஹ என்னும் வார்த்தை வரும்.
இவர் இயற்றிய 'வாதாபி கணபதிம் பஜே' என்னும் ஹம்சத்வனி ராகப் பாடல் மிகச் சிறந்த பாடலாக அவர் காலத்திலேயே புகழ் பெற்றது. இன்றும் சங்கீத வித்வான்களால் தங்கள் கச்சேரியில் தொடக்கப் பாடலாகப் பாடப்பெறும் பெருமை பெற்று விளங்குகிறது. முத்துசுவாமி தீட்சிதர் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஒரு பாடலை இயற்றினார் 'ஸ்ரீ காந்திமதிம் சங்கர யுவதிம்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் அபூர்வ ராகத்தில் அமைந்த அபூர்வப் பாடலாகக் கருதப்படுகிறது. இவர் எண்ணற்ற கிருதிகளை இயற்றியபோதிலும், அவற்றுள் கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம், சிவ நவா வர்ணம், நவக்கிரகக் கிருதிகள் இன்றைக்கும் எல்லா வித்வான்களாலும் பாடப்பெற்று இவரின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன. இவர் சிவன் மீது பாடிய 'ஸ்ரீ விஸ்வநாதம்' என்னும் கிருதி இவருடைய கிருதிகளுக்கெல்லாம் சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு ஒரே பாட்டில் சிவனின் பெருமைகளை விளக்கும் வண்ணமாக அந்த கிருதி அமைந்துள்ளது. இவருடைய படைப்பாற்றல் காரணமாக, தன்னுடைய சமகாலத்தவர்களான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ ஷ்யாமா சாஸ்த்ரிகளுடன் சேர்த்து சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரகப் போற்றி வணங்கப்படுகிறார்.
இவர் எட்டையபுரத்தில் தன் கடைசி காலத்தில் வசித்தபோது அங்கு கடுமையான வறட்சி நிலவியது. அவர் உடனே அமிர்தவர்ஷிணி ராகத்தில் அம்பிகை மீது 'ஆனந்தாமிர்தகர்ஷினி' என்னும் கிருதியைப் பாடி மழை பொழிய வைத்தார். இவர் காலத்தில் நிகழ்ந்த ஒரு அற்புதம் இது. எண்ணற்ற மக்கள் பார்த்து அதிசயித்து ஆனந்தித்த காட்சி.
ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சீடர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த "மீனலோசனி பாப மோசனி" என்ற கிருதியைப் பாடப் பாடக் கேட்டுக் கொண்டு, இரு கைகளையும் தலை மேல் குவித்து சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. இவரது சமாதி எட்டயபுரத்தில் அமைந்துள்ளது.
1976 ஆம் ஆண்டு இந்திய அரசு முத்துசாமி தீட்சிதரின் உருவப்படம் பொறித்த தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவித்தது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
சூரசம்ஹாரம் நடைபெறாத முருகன் தலம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணி ஆகும். முருகப் பெருமான் சூரனை வதம் செய்தப் பின்னர் சினம் தணிந்து இத் தலத்தில் வந்து அமர்ந்ததால் 'திருத்தணிகை' என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி 'திருத்தணி' ஆனது.
முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும்.
ஆனால் திருத்தணி,முருகன், சினம் தணிந்து ஓய்வெடுத்த தலம் என்பதால் இங்கு சூரசம்ஹார பெருவிழா நடைபெறுவதில்லை. மேலும் முருகப் பெருமானின் திருக்கரத்தில் வேல் இல்லாமல் வஜ்ராயுதம் தாங்கியிருக்கிற திருக்கோலத்தை காணமுடியும். திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரத்தன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.
திருச்செந்தூரின் இலை விபூதி போன்று திருத்தணியிலும் சிறப்பு பிரசாதம் ஒன்று உண்டு. இரண்டாம் பிராகாரத்தில் யாக சாலைக்கு எதிரில் உள்ள சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனமே சுவாமிக்கு சார்த்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சர்வரோக நிவாரணியான இந்த பிரசாதத்தை 'ஸ்ரீபாதரேணு' என்கிறார்கள்.

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்
காணும் பொங்கலன்று மாட்டு வண்டியில் வீதி உலா வரும் திருத்தணி முருகன்
திருத்தணி முருகன் கோவிலின் உற்சவர் காணும் பொங்கலன்று, வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக இறங்கி வருவார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தர நகர வீதிகளில் உலா வருவார். திருவீதி உலா வரும் தெருக்களில் வண்ணக்கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தர்கள் முருகனை வழிபடுவர். பொதுவாக காணும் பொங்கல் அன்று பக்தர்கள் கோவிலுக்கு இறைவனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால், திருத்தணியில்
பக்தர்களுக்கு தரிசனம் தர, முருகப்பெருமானே மலையில் இருந்து இறங்கி வருவது தனிச்சிறப்பாகும்.
காணும் பொங்கல் சிறப்புகள்
பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுகக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் ’போகி’ பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்நாள் தைப்பொங்கல் கொண்டாடாப்படுகிறது. இடண்டாவது நாளில் உழவுக்கு உதவும் மாடுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம். நான்காவது நாள்தான் காணும் பொங்கல். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். காணும் பொங்கல் (கன்னி பொங்கல்) அன்று திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தமக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டுமென்று மார்கழி மாதம் முழுவதும் விரதம் எடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வது கன்னி பொங்கலாகும்.
காணும் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவிக்கு அன்னமிடவேண்டும் என்பதே சம்பிரதாயமாகும். ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும். முதல் நாள் பொங்கிய சாத்தில் மஞ்சள் பொடி, கொஞ்சம் குங்குமம் தூவி, பால் சேர்த்து , சக்கரைப் பொங்கல், தயிர் சேர்த்த சாதத்தை காகத்திற்கும் ,குருவிக்கும் படையல் வைக்க வேண்டும். 'காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்' என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும்.
காணும் பொங்கலன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் பெரும்பாலோரின் நடைமுறையாக உள்ளது. முக்கியமான பண்டிகை ஆகும். இந்நாள் பெண்களுக்கு, பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.டக்கும்.

சுப்ரமணிய சுவாமி கோவில்
புத்தாண்டில் படிபூஜை நடக்கும் முருகன் தலம்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிவில் வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கின்றது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.

சுப்ரமணிய சுவாமி கோவில்
குழந்தை முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்
திருத்தணி மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

சுப்பிரமணிய சுவாமி கோயில்
சூரசம்ஹாரம் நடைபெறாத முருகன் தலம்
முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் திருத்தணி,முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. அப்போது, ஆயிரம் கிலோ பூக்களை புஷ்பாஞ்சலிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப் பெருமான் கையில் வேல் இல்லாத தலம்
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு திருத்தணி.இத்தலம் அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும் சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இத்தலத்து முருகனின் திருநாமம் சுப்ரமணியசுவாமி. முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. அலங்காரத்தின்போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர்.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
வள்ளியும் தெய்வானையும் ஒருவராக இணைந்து காட்சி தரும் திருப்புகழ் தலம்
முருகனின், ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும், ஒரே அம்பிகையாக, கஜவள்ளி என்னும் பெயரில் அருள்கிறார்கள். கஜவள்ளி வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள்.
மகிஷாசுரமர்த்தினி கோயில்
கசக்காத வேப்பிலை பிரசாதம்
திருத்தணிக்கு அருகில் உள்ள மத்தூர் என்னும் ஊரில், மகிஷாசுரமர்த்தினி கோவில் இருக்கிறது.இக்கோவில் வேப்பமரத்தின் இலைதான் பிரசாதம்.இந்த வேப்பிலை கசக்காது எனபது குறிப்பிடத்தக்கது .
ஹேரம்ப விநாயகர் கோயில்
ஹேரம்ப விநாயகர்
திருத்தணி அருகில் உள்ள மின்னல் கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஐந்து முகங்களோடு கருவறையில் சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பிரதான மூர்த்தியாக ‘ஹேரம்ப விநாயகர்’ அருளாட்சி புரிகிறார். இந்த சிம்ம வாகனத்தின் பார்வை பட்டால் விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாகும்.