கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்

மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கும் அரிய தலம்

சுக்கிர பகவானுக்குரிய பரிகார தலம்

திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், சேரன்மாதேவிக்கு மிக அருகில் அமைந்துள்ள தலம் கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தின் மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக பூதேவி ஸ்ரீதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கின்றனர். இந்தியாவிலேயே மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் உற்சவர் வெங்கடாஜலபதியாகவும் காணப்படுகின்ற நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஓரிரு இடங்களில் தான் உள்ளன.

மூலவர் சுதர்சன சக்கரத்தில் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகா சுதர்சன மூர்த்தியாகவும், பின்புறம் யோக நரசிம்மராகவும் காட்சியளிப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.முன்புறம் காட்சிதரும் ஸ்ரீ சுதர்சனர் சங்கு, சக்கரம், அங்குசம், மழு, ஈட்டி, தண்டு, கலப்பை, அக்னி, கத்தி, வேல், வில், பாசம், வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் போன்ற ஆயுதங்களை தாங்கி பதினாறு கரங்களுடன் காட்சித் தருகிறார். இவருக்குப் பின்புறம் காணப்படும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறார்.தசாவதாரங்களில் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை இவர் ஒருங்கே பெற்றவர். திருமால் இவரிடம் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அளிக்கும் உரிமையைத் தந்துள்ளார்.

சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதி. எனவே இத்தலம் சுக்கிரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகின்றது.

திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் இப் பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறிய குழந்தைகளுக்கு தாமிரபரணி நதி படித்துறையில் பாயாசம் வழங்கினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஆகும். . இங்குள்ள நரசிம்மருக்குப் பிரதோஷ காலங்களில் தொடர்ச்சியாகப் பதினொன்று பிரதோஷ நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் பக்தர்கள் நினைத்து வேண்டியது நிறைவேறும்.

Read More