பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி  கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்

சிம்ம யாளியின் வாயில் இருந்து தொங்கும் கல் சங்கிலி

நடுவில் தாமரை மலருடன் நுணுக்கமான வேலைப்பாடு உடைய ராசி சக்கரம்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ளது 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில். 'பொழில்வாய்ச்சி' (பொழில் வாய்ந்த ஊர் -மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது) என்ற பழமையான பெயர் கொண்ட இவ்வூர் 'முடிகொண்ட சோழநல்லூர்' என்று மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.

இக்கோவில் ஒரு சிற்பக் கலை பொக்கிஷமாக விளங்குகின்றது. முருகனது கருவறையையொட்டி, தென்புறத்தில் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. இவற்றிற்கு முன்னால் 24 துாண்கள் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இந்த தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்,தடாதகைப்பிராட்டியார், கங்காளர், துர்க்கை, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்ப நாயனார், தசாவதாரக் காட்சிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

சிவன் சந்நதிக்கு நேர் மேலே விதானத்தில் ஒரே கல்லில் நடுவில் தாமரை மலருடன், 12 ராசிகள் உருவ வடிவில் சதுரமான அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. அதனையொட்டி, ஒரே கல்லில் சிம்ம யாளியின் வாயினின்றும் மூன்று வளையங்கள் ஒன்றில் ஒன்றாக பிணைத்து, கல் சங்கிலி தொங்குகின்றது. மேற்கூரையில் உள்ள சிம்ம யாளி மிகுந்த கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கொடி போன்ற பூ வேலைப்பாடுகள், சிம்மத்தின் முன்னங்கால் பகுதி, பின்னங்கால் தொடைப்பகுதி, வால் பகுதிகளில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.நான்கு கல் வளையங்கள் கொண்ட கற்சங்கிலியை சிம்ம யாளி வாயில் கவ்விப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சங்கிலியின் கடைசி வளையத்தின் அடியில் அழகிய தாமரை மலர் நுட்பமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்

நாரதர் அளித்த சாபத்தினால் இரு தேவர்கள், மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். பிருந்தாவனத்தில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக்கொண்டே கண்ணன், அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் அதை பலமாக இழுத்த போது, மரங்கள் வேரோடு சாய்ந்து, அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள்.

தடாதகைப் பிராட்டி

தடாதகைப் பிராட்டி (ஸ்ரீ மீனாட்சி) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் அரிய சிற்பம் இவ்வாலயத் தூணில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் தூண்களில் இருக்கும் இது போன்ற பல பேரழகு புடைப்புச் சிற்பங்கள், பழங்கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

கலை நயத்துடன் அமைக்கப்பட்ட அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரை (பிரணாளம்)

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்கள் இறை வழிபாட்டு தலங்களாக மட்டுமன்றி சிற்பக் கலைக் கூடங்களாகவும் விளங்குகின்றன. நம் கோவில்களின் கட்டிடக்கலை, அதன் தனித்துவமான பாணி, வடிவமைப்பு ஆகியவை நம் முன்னோர்களின் திறமையை வெளிக்காட்டுகின்றன. மூலவரின் கருவறை, மண்டபங்கள், தூண்கள், விதானங்கள், கோபுரங்கள், சிற்பங்கள் என்று ஒவ்வொரு பகுதியும் மிகுந்த கலைநயத்துடனும், கற்பனை திறனுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில், சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் சோழர் காலத்து கலைத்திறன் மிளிருகின்றது. இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரையை கூட மிகுந்த கலை நயத்துடன் அமைத்திருக்கிறார்கள். இந்த நீர் தாரைக்கு பிரணாளம் என்று பெயர். இக்கோவிலில் உள்ள பிரணாளத்தின் அபிஷேக நீர் வெளியேறும் பகுதியில் காணப்பெறும் சிற்ப அமைப்பு கலை நயத்துடன் துலங்குகின்றது. பிரணாளத்தின் பக்கவாட்டில் சங்கு ஊதும் பூதகணம் திகழ, ஒரு பூதத்தின் பிளந்த வாயிலிருந்து நீர் வெளியே அபிஷேக நீர் கொட்டும் வகையில் அச்சிற்பம் காணப்பெறுகின்றது.

Read More
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில்

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில்

தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பிரம்மாண்டமான நெற்களஞ்சியம்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தை அடுத்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாலைத்துறை. இறைவன் திருநாமம் பாலைவனநாதர்.இறைவியின் திருநாமம் தவளவெண்ணகையாள்.

இந்தக் கோவிலின் ராஜகோபுரத்தை ஒட்டி 1640ம் ஆண்டு கட்டப்பட்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. இந்த அபூர்வ நெற்களஞ்சியம் (நெற்குதிர்) தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் போன்ற நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது அமைச்சராக திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற்களாலும் காணப்படுகிறது. மேல் பகுதி ஒரே கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெற்களஞ்சியம் வட்ட வடிவம் கொண்டது. இதன் உயரம் 35 அடி, சுற்றளவு 80 அடி. பலத்த மழை பெய்தாலும் உள்ளே வெள்ள நீர் புகாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த நெற்களஞ்சியம், நம் முன்னோர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நெற்களஞ்சியத்தின் அடிப்பகுதி, மேற்பகுதி, நடுப்பகுதி என மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாயில் என மூன்று வாயில்கள், நெல்லை உள்ளே கொட்டுவதற்கும், வெளியே எடுத்து வருவதற்கும் வசதியாக களஞ்சியத்தின் சுவரில் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் அடிப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதி வரை நெல் நிரம்பியவுடன், அதை அடைத்துவிட்டு, 2-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதியும் நிரம்பியவுடன், 3-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். 3 வாயில்களும் நிரம்பினால் நெற்குதிர் நிரம்பி விடும். சுமார் 3 ஆயிரம் டன் வரையிலான நெல்லை இந்த குதிரில் சேமிக்கலாம்.

தானியங்கள் விஷ பூச்சிகளுக்கு, இரையாகாமல் பாதுகாப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த நெற்களஞ்சியம் வரலாற்று சின்னமாகவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் பார்க்கிறார்கள்.

Read More