
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்
வைகுண்ட பதவி அருளும் திவ்ய தேசம்
அமாவாசை மட்டுமின்றி எல்லா நாட்களும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க கூடிய தலம்
திருநெல்வேலி - திருச்செந்தூர் வழிப்பாதையில் 30 கி.மீ. தூரத்தில், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.
'குருகு' என்பதற்கு தமிழில் சங்கு என்று பொருள். இத்தல பெருமாளை சங்கன் எனும் கடலில் வாழும் சங்குகளின் அரசன் வந்து வழிபட்டு பேறு பெற்றதால் இத்தலம் குருகூர் என்று ஆனது. பின்னர் நம்மாழ்வாரால் ஆழ்வார் திருநகரி என்றானது.
முன்னொரு காலத்தில், இத்தலத்தில் ஒரு யானையும், வேடனும் போரிட்டு மடிந்தனர். இங்கு இறந்த ஒரே காரணத்திற்காக இருவரும் வைகுண்டம் சென்றனர். எனவே இத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம்.
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்
சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் எழுப்பும் அபூர்வ இசைத் தூண்
ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமான கிருஷ்ணன் சிற்பம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ள திவ்ய தேசம் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.
இக்கோவில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. அற்புதமான கற்சிலைகள் ஆலயம் முழுவதும் நிறைந்துள்ளன. கை விளக்கேந்திய பெண் சிற்பங்கள், பல வித குரங்குகள், யாளி உருவம் அமைந்த தூண்கள் ஆகியவற்றை இக்கோவிலில் காணலாம். நம்மாழ்வார் சன்னதியில் உள்ள இராமாயண சிற்பங்கள் மிகவும அருமை. ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட கிருஷ்ணன் சிற்பத்தின் நுணுக்கம் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
தூண் புடைப்புச் சிற்பங்களாக யானை, காளையை அடக்கும் வீரன், சிம்மம் போன்ற அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோவிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும்உள்ளன.
இந்த ஆலயத்தில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. அதில் ஒன்றை தட்டினால் மூன்று சுரங்களை எழுப்புகிறது . மற்றதில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இந்தத் இசைத் தூணின் இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு, மாறி மாறி ஊதினால் ஒன்றில் சங்கின் ஒலியும், மற்றதில் எக்காள ஒலியும் கேட்கிறது.
இக்கோவிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டது. கோவில் சிற்பம், இசை, கட்டிடக்கலையில் மட்டுமல்ல ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் கோவிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப் பட்டுள்ளன. பல் வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாய்த் வரையப்பட்டுள்ளன.