சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சுந்தர காமாட்சி அம்மன்
சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓச்சேரி என்னும் இடத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவிலும், காவேரிப்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுந்தரகாமாட்சி.
அம்பிகை சுந்தரகாமாட்சி பெயருக்கேற்றார்போல், அழகே உருவாய், அருளே வடிவாய் இங்கு ஆட்சிபுரிந்து வருகிறாள். பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில்தான் தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில், மங்கலங்களை அருளும் தேவியாய், மனதைக் கவரும் தெய்வீகத் தோற்றத்துடன் சாந்தம் தவழும் விழிகளால், மலர், பாசம் ஏந்தி அபய-வரத முத்திரை அருளி, குண்டலங்கள், ஹார வடங்கள், அணிந்தும் தாமரை மலரில் நின்ற திருக்கோலத்தில் ஒயிலுடன் காட்சி தருகிறாள். இப்படி நின்ற கோலத்தில் காமாட்சி அம்மன் அருள் புரிவது தனிச்சிறப்பாகும். அம்பாளின் எதிரில் ஸ்ரீசக்கரம் உள்ளது.
அம்பிகை சுந்தரகாமாட்சி மரகதப் பச்சைக்கல்லால் ஆனவள் என்கின்றனர். அம்பிகையின் கருவறை சுவர்களும் பச்சைக் கல்லால் ஆனது. பச்சை நிறம் குளிர்ச்சியை தரவல்லது. அதுபோல் பச்சைத் திருமேனி உடைய இந்த அம்மனும் தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து அவர்களது மனதை குளிர்விக்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்தலத்தில் வில்வ மரமும், வேப்ப மரமும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. குழந்தைப்பேறு வேண்டுவோர், தம்பதியராக வந்து இந்த மரங்களுக்கு பூஜை செய்தால் மழலைச் செல்வம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாசகர்களின் கவனத்திற்கு
நமது ஆலயத்துளிகள் இணையதளத்தின் தகவல்கள் காணொளி வடிவில், YouTube Channelல் தற்பொழுது வெளி வருகின்றது
YouTube Link- https://youtube.com/@alayathuligal
இந்த சேனலுக்கு Subscribe செய்து ஆதரவு அளிக்க வேண்டுகின்றோம்.