மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

விவசாயம் செழிக்க நடைபெறும் மீனாட்சி அம்மன் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா

அர்த்தநாரீஸ்வரராக காட்சி தரும் மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதனாலேயே 'ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி' என்று மீனாட்சி அம்மனை பெருமைப்படுத்தி சொல்லுவர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மீனாட்சி அம்மனுக்கு மட்டும் உரிய திருவிழாக்கள் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகியவை ஆகும்.

ஆடி முளைக்கொட்டு விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற பழமொழியின்படி, நாடு மற்றும் வீடுகள் செழிக்க முளைப்பாரி இட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும்.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஆடி முளைக்கொட்டு  திருவிழா நாட்களில், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிம்மம், வெள்ளி ரிஷபம், கிளி போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிபார்.

திருவிழாவின் 6ஆம் நாளில், மீனாட்சி அம்மன் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருள்வது விசேஷமான ஒன்று. 

அர்த்தநாரீஸ்வரராக காட்சி தரும் மீனாட்சி அம்மன்

ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் ஒன்பதாம் நாள் இரவு மீனாட்சி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் வலம் வருவார்.

மீனாட்சி அம்மன், சுவாமியின் ஜடாமகுட கீரிடம், திருமடல், அபய அஸ்தம் அணிந்து, வலது புறம் சிவனின் அம்சமாக வேட்டியும், இடது புறம் சக்தியின் அம்சமாக சேலையும் அணிந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவது, இத்திருவிழாவின் தனிச்சிறப்பாகும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் நாள் நிறைவு விழாவன்று மீனாட்சி அம்மன் கனக தண்டியல்  வாகனத்தில் உலகமே போற்றும் சயன திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் கோலாகலமான நிகழ்வாகும்.

வெள்ளி கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன்

அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் மீனாட்சி அம்மன்

கனக தண்டியல்  வாகனத்தில், சயன திருக்கோலத்தில் மீனாட்சி அம்மன்

 
Previous
Previous

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில்

Next
Next

மதுரை முக்தீஸ்வரர் கோவில்