திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்

பள்ளியறை இல்லாத, பள்ளியறை பூஜை நடைபெறாத தேவார தலம்

சீர்காழியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள தேவாரத்  தலம், திருமுல்லைவாசல். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர், மாசிலாமணீசர். இறைவியின் திருநாமம் அணிகொண்ட கோதையம்மை, சத்தியானந்த சவுந்தரி.

பல்லவ மன்னர்களாலும் சோழர்களாலும் கட்டப்பட்ட இக்கோயில், சுமார் 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் போற்றிப் பதிகம் பாடியுள்ளார். இங்குள்ள இறைவன் சுமார் மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

முல்லை வனத்தில் மன்னன் ஒருவனின் குதிரை மாட்டிக்கொண்டதால், அவன் வாளால் முல்லைச் செடிகளை வெட்டினான். அப்போது சுயம்பு லிங்கத்தின் மீது வாள் பட்டு ரத்தம் கசிந்ததாக ஐதீகம். அந்த வாள் வெட்டுத் தழும்பை இன்றும் மூலவரின் மீது காணலாம்.

எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் பள்ளியறை இல்லை.

பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்பாள்  வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்பாளுக்கு உபதேசித்தார்.

எனவே இத்தலத்தில் சிவபெருமான் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால், இங்கு பள்ளியறை பூஜையும் நடத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற சிவன் கோவிலில் இருந்து மாறுபட்ட நடைமுறையாகும்.

சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

Read More