மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்

மகாலட்சுமி

மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்

மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும், பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.

ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.

மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிலிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.

லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.

சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் மகாலட்சுமியை பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.

மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி, லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.

பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது. யானையின் முகத்திலும், குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம்,சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை,திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும். தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும்.சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.

தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால், திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு, அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

Read More
வரலட்சுமி விரதம்.
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

வரலட்சுமி விரதம்.

சகல செல்வங்களையும் அள்ளித் தரும் வரலட்சுமி அம்மன்

சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியத்திற்காகவும் மற்றும் குடும்ப சுபிட்சத்திற்காகவும், மகாலட்சுமிக்கு செய்யும் வழிபாட்டு பூஜையே இந்த வரலட்சுமி விரதம் ஆகும். ஒரு காலத்தில் மகத தேசத்தில், குண்டினபுரம் என்ற ஊரில் சாருமதி என்பவள் வசித்து வந்தாள். அவள் நல்ல குணங்களையும் நற்பண்புகளையும் பெற்றிருந்தாள். தன் கணவருக்கும் அவரின் பெற்றோருக்கும் பணிவிடை செய்வதையே தன் முதல் கடமையாகக் கொண்டிருந்தாள். அவள் குடும்பம் வறுமையில் வாடினாலும், இறைவனிடத்தில் மிகுந்த பக்தி செலுத்தினாள். சாருமதியின் மிகுந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு நாள் அவள் கனவில் தோன்றி, 'உன்னுடைய பக்தி என்னை நெகிழச் செய்து விட்டது. நீ என்னை பூஜித்து வழிபாடு செய். அதனால் உனக்கு சகல செல்வங்களும் வந்து சேரும்' என்று கூறி மறைந்தாள். மகாலட்சுமி கூறியபடி சாருமதி மேற்கொண்ட விரதமே, வரலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தினால் சாருமதி சகல சௌபாக்கியங்களையும் அடைந்து சிறப்புற வாழ்ந்தாள்.

Read More