
குன்றக்குடி சண்முகநாதர் கோவில்
முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தரும் தனிச்சிறப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி சண்முகநாதர் கோவில் . ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த முருகன் கோவிலுக்கு செல்ல 149 படிக்கட்டுகள் உள்ளன. முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப் போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாக தலபுராணம் கூறுகிறது. இந்த மலை மயிலின் வடிவத்தை ஒத்திருப்பதால், மயூரகிரி, மயில்மலை, அரசவரம், கிருஷ்ணநகரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.
கருவறையில் ஆறுமுகமும், பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன், குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.
மூலவர் சண்முகநாதர் கிழக்குத் திசையைப் பார்த்தபடி மயிலின் மீது வலது காலை மடித்தும், இடது காலைத் தொங்க விட்டவாறும் அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் வள்ளி என இருவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்துள்ளனர். இப்படி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து தரிசனம் தருவது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.
இக்கோவிலில் குடிகொண்ட முருகனை போற்றி அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், பாம்பன் சுவாமிகள் தன் பாடலிலும் சிறப்பித்து பாடியுள்ளார்கள்.

குன்றக்குடி தோகையடி விநாயகர் கோவில்
மயில் தோகை விரித்து அமர்ந்திருப்பது போல் இருக்கும் மலையடி வாரத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி முருகன் கோவில் . இங்குள்ள முருகன் கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருப்பதால் குன்றக்குடி என்று அழைக்கப்படுகின்றது. இது பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது.
முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப் போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது.
குன்றக்குடி மலையின் நுழைவாயிலில் இருக்கும் விநாயகர் 'தோகையடி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், குன்றக்குடி மலையின் அமைப்பு மயில் தோகை விரித்து அமர்ந்திருப்பது போல் தோன்றுவதால், அந்த இடத்தில் இருக்கும் விநாயகர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். முருகப் பெருமானுக்கு முன் விநாயகப் பெருமானை வழிபடுவது மரபு என்பதால், பக்தர்கள் முருகனை தரிசிக்கச் செல்லும் முன், தோகையடி விநாயகரை வணங்கிவிட்டுச் செல்வார்கள். குன்றக்குடி முருகனையும், தோகையடி விநாயகரையும் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.