நத்தம் பரமேஸ்வரமங்கலம் செண்பகேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நத்தம் பரமேஸ்வரமங்கலம் செண்பகேஸ்வரர் கோவில்

மகாலட்சுமி ஈசனை வழிபட்ட அபூர்வமான தலம்

மகாலட்சுமியின் அம்சமாக எழுந்தருளி இருக்கும் சௌந்தரநாயகி அம்பிகை

சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கல்பாக்கத்தில் இருந்து தென்மேற்கில் 10 கி.மீ. தொலைவில், கல்பாக்கத்திற்கு அடுத்துள்ள பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள தலம் நத்தம் பரமேஸ்வரமங்கலம்.இத்தலத்து இறைவன் திருநாமம் செண்பகேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில்.

பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் எடுப்பதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து அதிக சக்திமிக்க ஆலகால விஷம் தோன்ற, அதை அருந்தி சிவபெருமான் அனைவரையும் காப்பாற்றினார். மேலும் ஆமை வடிவில் தாங்கி இருந்த மகாவிஷ்ணுவின் உடல் விஷத்தினால் நீலமானது. இதை அறிந்த மகாலட்சுமி சிவபெருமானிடம் முறையிட அவரோ "நீ பூலோகத்தில் பாலாற்றின் கரையில் உள்ள செண்பகவனம் என்ற பகுதிக்குச் சென்று தவம் இயற்றுக. யாம் பார்வதி பரமேஸ்வரனாய் காட்சி தந்து அருளுவோம்" என்றுரைத்தார். இதன்படி லட்சுமிதேவி பூலோகத்தில் இப்பகுதிக்கு வந்து ஒரு செண்பக மரத்தின் அடியில் இருந்த லிங்கத்தை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டாள். அதனால் மகாவிஷ்ணுவின் உடலில் இருந்த விஷம் அகன்றது.

இக்கோவிலில், ஒரு தனிசன்னிதியில் தெற்கு திசைநோக்கி அம்பாள் ஸ்ரீசௌந்தர்யநாயகி சதுர்புஜநாயகியாக தாமரைப் பீடத்தின் மீது நின்ற திருக்கோலத்தில், மகாலட்சுமியின் அம்சமாக இங்கு எழுந்தருளி இருக்கிறாள். வழக்கமாக தனது திருக்கரங்களில் பாசம் அங்குசத்தை ஏந்தி காட்சி தரும் அம்பாள் இத்தலத்தில் மகாலட்சுமியைப் போல தனது திருக்கரங்களில் தாமரை மற்றும் நீலோத்பவ மலர்களை ஏந்தியவாறு காட்சி தருகிறாள். அம்பாளின் பாதத்தில் ஸ்ரீசக்கரத்தை தரிசிக்கலாம். இவ்வாலயத்தில் அம்பாள் ஸ்ரீசௌந்தர்யநாயகிக்கு முதல் ஆரத்தி முடிந்த பின்னரே இறைவனுக்கு ஆரத்தி நடைபெறுகிறது.

Read More