சிறுகமணி பக்தவத்ஸலேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சிறுகமணி பக்தவத்ஸலேசுவரர் கோவில்

திருகு பீடம் எனப்படும் அபூர்வ வடிவமைப்பு கொண்ட பீடத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகை

திருமண வரம் அருளும் கற்பகாம்பிகை

திருச்சியிலிருந்து மேற்கே கரூர் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுகமணி பக்தவத்ஸலேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கற்பகாம்பிகை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

இறைவி கற்பகாம்பிகை தெற்கு நோக்கி அமைந்துள்ள சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார். மேலிரு கரங்களில் தாமரை மலர் தாங்கி இருக்கின்றார். கீழிரு திருக்கரங்களில் அபய வரத முத்திரைகள் விளங்குகின்றன.

இத்தலத்து இறைவி கற்பகாம்பிகையின் சிலையானது 'திருகு பீடம்' எனப்படும் ஒரு சிறப்பு அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருகு பீடம் (screw type base) என்பது சிற்பக்கலையில் மிகவும் அரிதான, திருகப்பட்ட அல்லது சுருள் வடிவமைப்பு கொண்ட ஒரு சிறப்பு பீட அமைப்பாகும். பொதுவாக கோவில்களில் இறைவன், இறைவியின் சிலைகள், சிலை அடிப்பீடத்தில் நேராக வைக்கப்படும், அதனால் சிலையை நேராகத் தூக்க முடியும். ஆனால் இத்தலத்து கற்பகாம்பாள் சிலை, ஒரு திருகு அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது, அதில் சிலையைத் திருகித்தான் தூக்க வேண்டும். அந்த நாட்களில் சிலை திருட்டைத் தடுப்பதற்கான ஏற்பாடாக இது இருந்திருக்க வேண்டும். இத்தகைய திருகு பீட அமைப்பானது ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் மற்றும் மயிலாப்பூர் கற்பகாம்பாள் போன்ற சில அபூர்வமான கோயில் சிலைகளின் அடியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

கற்பகம் என்றால் தேவலோகத்தில் உள்ள, கேட்ட வரங்களை வழங்கும் கற்பக விருட்சம் போன்றவள் என்று பொருள். பக்தர்களின் கோரிக்கைகளை கற்பகத் தருவாக இருந்து நிறைவேற்றித் தருவதால், அன்னைக்கு கற்பகாம்பாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இத்தலத்து அம்பிகை கற்பகாம்பாளை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More