திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்

ஆலயத்துளிகள் இணையதளத்தின் 1500ஆம் நாள் பதிவு

ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்திய தங்கச் செங்கோல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை கிராமத்தில் அமைந்துள்ள தேவார தலம், கோமுக்தீஸ்வரர் கோவில். இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏழு நூற்றாண்டுகள் பாரம்பரியம் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சிறியதும், பெரியதுமாக ஏறத்தாழ 75 கோவில்கள் உள்ளன.

1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த சரித்திர நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குத் தனிப்பெருமை உண்டு.

இந்தியாவின் கடைசி ஆங்கிலேய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டன், நேருவை அழைத்து, 'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?' என்று கேட்க, குழப்பம் அடைந்த நேரு, உடனடியாகப் பதில் கூறவில்லை. அடுத்து மூதறிஞர் ராஜாஜியை அணுகி, 'இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்' என்று கேட்டுக்கொண்டாராம். உடனே ராஜாஜி, 'கவலை வேண்டாம். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிமாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பார். அதுபோல நாமும் மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று ஆட்சிமாற்றம் அடையலாம்' என்று கூறியிருக்கிறார். அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்தவர் அம்பலவாண தேசிகர் (1937 - 1951). அவரைத் தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.45 மணிக்கு, தேவாரத்தில் கோளறு பதிகத்திலுள்ள 11 பாடல்களைப் பாடுமாறு குருமகா சந்நிதானம் அருளியிருந்தார். அதன்படி ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலில் கடைசி அடியான ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடிக்கும்போதே மவுண்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை திருவாவடுதுறை இளைய தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என்கிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது, இறைநாமம் உச்சரித்து, செங்கோலை திரு. நேருவிடம் வழங்கி இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்தினார். இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த விஷயமாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்திய அந்த தங்கச் செங்கோல், 100 சவரன் தங்கத்தில் உருவாக்கப்பட்டது. ஐந்தடி நீளம் கொண்ட அந்த தங்கச் செங்கோலின் உச்சியில் ரிஷபச் சிலை கம்பீரமாக இருந்தது. கைப்பிடியில் தேசத்தின் செழிப்புக்கு அடையாளமாக லட்சுமி தேவி உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியும், இந்த செங்கோலை ஆதீனம் உருவாக்கிக் கொடுத்தது என்பதற்கான தமிழ் வாசகங்களும் அதில் இடம் பிடித்தன.

Next
Next

தரப்பாக்கம் கைலாசநாதர் கோவில்