
வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில்
முருகன் இளமை, குடும்பஸ்தர், முதுமை என மூன்று கோலங்களில் காட்சி தரும் ஒரே தலம்
குருடராகவும், ஊமையாகவும் இருந்த சிற்பி குழந்தை வடிவ முருகன் சிலையை வடித்த அற்புதம்
சேலம் - கள்ளக்குறிச்சி சாலையில் 64 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுக்கோட்டை. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது வட சென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி உண்டு.
இக்கோவிலில் முருகப் பெருமான் இளமை, முதுமை, குடும்பஸ்தர் என்று மூன்று கோலங்களில் காட்சி அருள்வது தனிச்சிறப்பாகும். முருகப் பெருமான், கருவறையில் பாலசுப்பிரமணியராக குழந்தை வடிவில் (இளமை) மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்தில் காட்சி அருள்கிறார். அவர் அருகில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி துறவற கோலத்தில் (முதுமை) அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி வள்ளி, தெய்வயானையுடன் கிரகஸ்த கோலத்தில் (குடும்பஸ்தராக) அருள்பாலிக்கிறார்.
சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோவிலில் தொடக்கத்தில் ஐந்து நிலை ராஜ கோபுரம், சுயம்பு மூர்த்தி சன்னதியும், அருகில் தண்டாயுதபாணி சன்னதியும் மட்டும் இருந்தது. கடந்த நூற்றாண்டில்தான் குழந்தை வடிவ முருகன் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் பின்னணியில் முருகன் நடத்திய அற்புத திருவிளையாடல் உள்ளது.
அப்பன்ன சுவாமிகள் என்பவர் வைணவ பக்தர். இருப்பினும் வடசென்னிமலை முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். அவர் ஒரு குழந்தை வடிவ முருகன் சிலையை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மகாப்பெரியவரை நேரில் சந்தித்து, வடசென்னிமலை முருகன் கோவிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால், சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் திருவண்ணாமலையில் உள்ள இரமணர் ஆசரமத்தில் வைத்தியநாத சிற்பி என்றொருவர் இருக்கிறார். அவரிடம் சிலையை செய்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். உடனே அப்பன்ன சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று இரமணர் ஆசிரமத்தில் இருக் கும் வைத்தியநாத சிற்பியை சந்தித்தார். ஆனால் வைத்தியநாத சிற்பி பார்வை தெரியாத குருடராகவும் , வாய்ப்பேச முடியாத ஊமையாகவும் இருப்பதை கண்டு பயந்தார். பார்வையற்ற இந்த சிற்பியால் எப்படி சிலை செய்ய முடியும் என்ற சந்தேகத்தோடு இருந்தார். காஞ்சிப் பெரியவர் தம்மை சோதிப்பதாக நினைத்து வைத்தியநாத சிற்பியிடம் வடசென்னி மலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலை ஒன்றை வடித்து தருமாறு உரத்த குரலில் வேண்டினார். அதற்கு சம்மதம் தெரிவித்த சிற்பி, அப்பன்ன சுவாமிகளை ஏழு நாட்கள் கழித்து வருமாறு சைகையில் தெரிவித்தார்.
ஏழு நாட்கள் கழித்து அப்பன்ன சுவாமிகள் சிற்பியை சந்தித்தபோது, அங்கு குழந்தை வேலன் விக்கிரகத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதற்குள்ளாக அற்புதமான குழந்தை வேலன் சிலையை அழகாக வடித்து முடித்திருந்தார் சிற்பி. இது எப்படி சாத்தியமானது என வியந்து நின்ற அப்பன்ன சுவாமிகள், குழந்தை வேலன் சிலையை பயபக்தியுடன் சிற்பியிடமிருந்து பெற்றுச் சென்று வடசென்னிமலை முருகன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். சேலம் ஆத்தூரில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள வடக்குமரை கிராமத்தில் அப்பன்ன சுவாமிகளது ஜீவ சமாதி உள்ளது.
ஒரே சமயத்தில் முருகப் பெருமானின் மூன்று கோலங்களையும் வணங்கினால், அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வந்து முருகப் பெருமானை வணங்கினால் தீமைகள் விலகும் என்பது ஐதீகம்.இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனை அம்மாவசை முடிந்து வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.