மாதப்பூர் முத்துகுமாரசாமி கோவில்
பழநி முருகன் போலவே ஒரே உருவ ஒற்றுமை கொண்ட மாதப்பூர் முத்துக்குமாரசாமி
பல்லடத்திலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொல்லையில் உள்ளது மாதப்பூர். இத்தலத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது முத்துகுமாரசாமி கோவில். கோவிலுக்கு செல்ல 40 படிக்கட்டுகள் உள்ளன. ஞான பழத்துக்காக கோபித்துக்கொண்ட முருகன், பழநிமலையில் அமர்ந்தார். அவரைத் தேடி வந்த சிவனும் பார்வதியும் இக்குன்றின் மீது ஏறி நின்று மகனே நீ எங்கே இருக்கின்றாய்? என குரல் எழுப்பிய போது, பழநியில் அமர்ந்திருந்த முருகன் தாய், தந்தையருக்காக இங்கு காட்சியளித்ததாக தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. மாதாவுக்கு மகன் காட்சியளித்ததால் மாதா ஊர் என வழங்கப்பட்டு பின் மருவி மாதப்பூர் என ஆனது.
பழநி கோவில் உருவான சமகாலத்தில்தான், இக்கோவிலும் உருவானது. இக்கோவிலில், தனிச்சன்னிதியில் முருகன், முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்தில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். பழநிமுருகன் போலவே மாதப்பூர் முத்துக்குமாரசாமியும் ஒரே உருவ ஒற்றுமையுடன் இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். பழநி முருகன் மேற்கு நோக்கியும், இம்முருகன் கிழக்கு நோக்கியும் இருப்பதுதான் ஒரே வித்தியாசம். முருகன் என்றாலே அழகன்தான். ஆனால் இத்தலத்து முருகனோ பேரழகு கொண்டவர். முருகன் சன்னதிக்கு அருகில் சிவபெருமான் மதிமாலீஸ்வரர் என்ற திருநாமத்துடனும், பார்வதி தேவி மரகதாம்பிகை என்ற திருநாமத்துடனும் தனித் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்கள். பழனியில் இப்படி முருகனுடன், இறைவனும் இறைவியும் எழுந்தருளவில்லை.
சஷ்டி விரதம் இருந்து இத்தலத்து முருகனை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்; மழலைச் செல்வம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.