
பொழிச்சலூர் அகத்தீசுவரர் கோவில்
வடதிருநள்ளாறு - திருநள்ளாறுக்கு இணையான சென்னையிலுள்ள சனி பகவான் பரிகார தலம்
சென்னை மாநகரம் பல்லாவரத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் அமைந் துள்ளது அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. பல்லவர்கள் காலத்தில் பொழில் சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, பொழிச்சலூர் என்றானது. ஒரு காலத்தில் பல்லவர்கள் இவ்விடத்தில் யானைகளை பாதுகாத்து வந்தார்கள் . இங்குள்ள அடையார் ஆறும் மற்றும் அருகில் உள்ள மடுவும் யானைகளை பாதுகாக்க உகர்ந்ததாக இருந்தது . அதனால் ஆணைகாபுத்தூர் என்று பெயர் பெற்றிருந்த இப்பகுதி பின்னர் மருவி அனகாபுத்தூர் என்று தற்போது அழைக்கப்படுகிறது. அகத்திய முனிவர் தென்பகுதியில் சிவபூஜை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார். சனி பகவான் பிறருக்கு கண்டச்சனி ,ஏழரை சனி ,ஜென்ம சனி என்று அவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார் போல தண்டனைகளை கொடுத்து வந்ததால், அவருக்கு ஏற்பட்ட பாவங்களை போக்க சிவபெருமானை கேட்க அவர் இந்த இடத்தில் வந்து தனக்கு பூஜை செய் என்று கூறினார் அதன்படி அவர் இங்கு வந்து குளத்தை உருவாக்கி இறைவனை வேண்டிவந்தார் அதனால் அவர் பாவங்கள் போயிற்று . இங்குள்ள குளத்திற்கு வடதிருநள்ளாறு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சனிபகவான் திருநள்ளாறு திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதைப்போலவே இங்கும் தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார். இங்குள்ள சனி பகவான் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ஆகையால் இத்தலத்தை வடதிருநள்ளாறு என்று போற்றுகின்றனர். எனவே திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்குள்ள சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர். சனி தோஷங்களுக்கு பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது.
இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பு, கோயிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள சம்ஹார மகா கால பைரவர். அஷ்டமி தோறும் இங்கு நடைபெறும் பைரவ வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது.
பிரார்த்தனை
ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த சனிதோஷம் இருந்தாலும் பொழிச்சலூரில் இருக்கும் அகத்தீஸ்வரரையும், சனிபகவானையும் வணங்கி வழிபட்டால் தோஷநிவர்த்தி அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திரிசூலம் திரிசூலநாதர் கோவில்
மன அமைதி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரிசூலநாதர் கோவில். பிரம்மன் வழிபட்ட தலம் இது. நான்கு வேதங்களே, நான்கு மலைகளாக இக்கோயிலைச் சுற்றி இருக்கின்றது. சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். மலைகளுக்கிடையே வீற்றிருக்கும் இத்தல இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி. பின்னர் திரிசூலமாகி விட்டது.
இறைவன் திரிசூலநாதர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். சுவாமி அருகில் சொர்ணாம்பிகை கருவறையில் இருக்க, மற்றொரு பிரதான அம்பாள் திரிபுரசுந்தரி தனி சந்நிதியில், தெற்கு நோக்கி எழில்கோலத்துடன் அருள்புரிகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் அட்சத மாலையும், தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள்பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். அன்று அவளை வழிபடுவர்களுக்கு மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பூப்பாவாடையுடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை எழுந்தருளி இருப்பதற்கு, ஒரு பின்னணி வரலாறு உண்டு. அந்நியர் படையெடுப்பின்போது கோவிலில் இருந்த சொர்ணாம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள்.அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே சொர்ணாம்பிகையை இருக்கச் செய்திருக்கிறார்கள்.

தைப்பூசத் திருநாளின் சிறப்புகள்
தைப்பூசத் திருநாளின் சிறப்புகள்
முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும், பெளர்ணமியும் இணையும் நாளை தைப்பூச திருநாளாக முருக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். தைப்பூச நன்னாளின் சில சிறப்புகளை இப்பதிவில் நாம் காணலாம்.
- ஆன்மிகத்தில் பொதுவாக 9, 18, 7 போன்ற எண்கள் பல வகையிலும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி தமிழ் மாதங்களில் பத்தாவது மாதமாகிய தை மாதமும், 27 நட்சத்திரங்களில் 8 வது நட்சத்திரமாகிய பூசமும் சேர்ந்து வருவது இந்த தைப்பூசத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும்.
- ஒரு கல்பத்தில் (பிரம்மாவின் பகல் நேரத்தில்) தைப்பூச தினத்தில்தான், உலகப் படைப்பு தோன்றியது. நீர் முதலில் தோன்றியது; அதில் பிரமாண்டமான றிலப்பகுதி உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஐதிகத்தின் அடிப்படையில் பல்வேறு ஆலயங்களில் அன்று தெப்போற்சவம் நடைபெறுகிறது.
- சூரபத்மனை அழிக்க கிளம்பிய முருகபெருமானுக்கு, பராசக்தி தன்னுடைய சக்தி வேலை கொடுத்த தினம் தைப்பூசம்.
- தைப்பூசம்அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டார்.
- முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால், ஊடல் கொண்ட தெய்வயானையை சமாதானம் செய்து, முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம்.
- சிவபெருமான் வியாக்கிரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர்களுக்கும் தனது ஆனந்த திருநடனத்தை காட்டு அருளியது தைப்பூச நன்னாளில் தான்.
- தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார்.
- ஜோதிடத்தில் மங்களகாரகன் என குறிப்பிடப்படும் குரு பகவான் அவதரித்தது இந்த நாளில் தான்.
- ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார்.
- ராமலிங்க அடிகளார் 1874-ம் ஆண்டு, தைப்பூச நாளில் அருள் ஜோதியில் கலந்தார்.
- முருகப் பெருமான் அனைத்து தெய்வங்களின் அம்சமாக திகழக் கூடியவர் என்பதாலேயே இந்த நாள் முருகப் பெருமானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூச விழா 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் பால் குடம் எடுத்து வந்தும், காவடி ஏந்தி வந்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக வந்து முருகனை பக்தர்கள் வழிபடுவார்கள். முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக, நடந்து செல்வதால் தீராத வினையும் தீரும் என்பது நம்பிக்கை. பால் காவடி, பன்னீர் காவடி, சந்தன காவடி என காவடிகள் சுமந்து விரதம் இருந்து தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் இந்த தைப்பூசத்திருநாளில் செலுத்துவது வழக்கம். அறுபடை வீடுகளிலும் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் இலட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசித்து வணங்குவது வழக்கம்.
- தைப்பூசத்தன்று விரதமிருந்து, மனமுருகி முருகனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தைப்பூசத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் திருமண தடை விலகும், குழந்தைப்பேறு கிடைக்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், வறுமை ஒழியும், வளமான வாழ்க்கை அமையும், பகை ஒழியும், நினைத்த காரியம் நிறைவேறும்.

வடுவூர் கோதண்டராமர் கோவில்
ராமர் தன்னுடைய உற்சவத் திருமேனியை தானே உருவாக்கிய தலம்
தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், மன்னார்குடியில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள வடுவூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 'பஞ்ச ராம க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் தலங்களில் வடுவூரும் ஒன்று. இக்கோவில் தட்சிண அயோத்தி என்று போற்றப்படுகிறது. கரிகால் சோழன் போரில் வென்று ஊர் திரும்பியபோது, மூலிகைகள் நிறைந்த இந்த ஊரில் போரில் அடிபட்ட வீரர்களுக்கு வைத்தியம் பார்த்தார்களாம். வீரர்களின் வடுக்களை ஆற்றிய ஊர் என்பதால் வடுவூர் என்றும் கூறுகின்றனர்.
மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கயாண கோவத்தில் லட்சுமணன், அனுமாருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவர் ராமர் பேரழகு உடையவர். இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். வடுவூர் சிலையழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர். அப்படி கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு, இந்தக் கோவிலில் ராமருடைய உற்சவத் திருமேனி விளங்குகின்றது. இந்த உற்சவ மூர்த்தியை, ஸ்ரீ ராமரே உருவாக்கினார் என்பதனால் தான் தனிச்சிறப்புடன் விளங்குகின்றது.
ராமர் உற்சவத் திருமேனியை உருவாக்கிய வரலாறு
ராவண வதத்திற்கு பிறகு, சீதாபிராட்டியை மீட்டு, வனவாசம் முடித்துக்கொண்டு கோடியக்கரை வழியாக அயோத்திக்கு ராமர் திரும்பியபோது, அவரைக் கண்ட ரிஷிகள் ராமரைத் தங்கள் கூடவே இருக்கச் சொல்லிக் கேட்டார்களாம். பரதனைக காண வேண்டிய அவசியத்தை அவரகளுக்குக் கூறிய ராமர் தன்னுடைய உருவத்தை விக்கிரகமாக வடித்து அவர்களுக்குக் கொடுத்து, நானே வேண்டுமா? அல்லது இந்த விக்கிரகம் வேண்டுமா? எனக் கேட்க, அந்த விக்கிரகத்தின் அழகில மயங்கிய ரிஷிகள், ராமருக்கு பதிலாக அந்த விக்கிரகத் திருமேனியே போதும் என்றனராம. தாங்கள் பூஜிக்க அந்த விக்கிரகத்தைத் தரும்படி ரிஷிகள் கேடக, அதன்படி ராமர அவர்களிடம் விக்கிரகத்தைக் கொடுத்துவிட்டு, அயோததி திரும்பினார் என்பது வரலாறு
பிற்காலத்தில் அந்நியப் படையெடுப்பினபோது, பாதுகாப்பிற்காக தலைஞாயிறு என்னும் தலத்தில் இந்த விக்கிரங்களை மறைத்து வைத்தனர். தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னன கனவில் வந்த ராமர தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு, தனக்குக் கோவில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் விக்கிரகங்களை எடுத்துக் கொண்டு தஞ்சையில் பிரதிஷ்டை செய்ட எண்ணிக கொண்டு வரும் வழியில், வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. விக்கிரகங்களை வடுவூர் கோவிலில் வைத்துக் கொண்டு, அங்கேயே தங்கினார. அந்த ஊர் மக்கள் ராமரின் அழகில மயங்கி, அங்கேயே ஸ்ரீராமரை விட்டுச் செல்ல மன்னனிடம் வேண்டினர். மன்னன மறுதது விக்கிரகங்களைத்தை எடுக்க முயற்சித்தபோது வைத்த இடத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை. அதனால் மக்கள் வேண்டியபடி, மன்னன் வடுவூரிலேயே சிலையை விட்டு சென்றார் என்கிறது தல புராணம்.
பிரார்த்தனை
திருமணத் தடை உள்ளவர்கள், இந்தக் கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தைப் பாரத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த ராமரிடம் வேண்டிக் கொண்டால் பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள் எனவும், நியாய சிந்தனைகள் உண்டாகும் எனவும் நம்பப்படுகிறது.

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்
மூன்று முகங்கள் கொண்ட அபூர்வ விஷ்ணு துர்க்கை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். ருத்ராட்சப்பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாக, தனது நான்கு கைகளில் இரண்டில் சங்கமும், சக்கரமும் ஏந்தி காட்சி தருபவள் விஷ்ணு துர்க்கை எனப்படுகிறாள். பதினெட்டு அல்லது எட்டு அல்லது நான்கு கைகளுடனும் ஒவ்வொரு கைகளிலும் கத்தி சூலம் போன்ற ஆயுதங்களுடனும், அசுரர்களை எதிர்த்து போரிடும் உக்கிர சொரூபமாகக் காட்சிக் கொடுப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள். இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் விஷ்ணு துர்க்கை மூன்று முகங்களுடன் அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறாள். இப்படி மூன்று முகம் கொண்ட விஷ்ணு துர்க்கை தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை.
இந்தக் கோவிலில் எழுந்தருளியுள்ள மூன்று முக விஷ்ணு துர்க்கையைத் தரிசித்தால் முன் ஜன்ம வினைகள் உடனே தீரும். திருமணமாகி மன வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதிகள் இங்கு வந்து, இந்த மூன்று முக துர்க்கையைப் பிரார்த்தித்தால், விரைவில் மன வேறுபாடு நீங்கி ஒன்று சேருவார்கள் என தல வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. மூன்றுமுக விஷ்ணு துர்க்கைக்குச் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கும்பகோணம் ராமசாமி கோவில்
தென்னக அயோத்தி - கும்பகோணம் ராமசாமி கோவில்
சீதையும் ராமரும் திருமண கோலத்தில் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து இருக்கும் அபூர்வ காட்சி
கும்பகோணம் ராமசாமி கோவில் தென்னக அயோத்தி என்னும் சிறப்பை பெற்றது. இக்கோவில் கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள தாராசுரத்தில் குளம் வெட்டும்போது கிடைத்த ராமன், சீதையின் சிலைகளைத் தான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல வரலாறு.
கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் ஆகியோர் எழுந்தருளி இருக்கிறார்கள். மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, லட்சுமணன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க காட்சி தருகின்றனர். ராமபிரான் தனது சகோதரர்களோடு எழுந்து அருளி இருக்கும் தலங்கள் மிகவும் அரிது. உத்தரப்பிரதேசம் அயோத்தி, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் மற்றும் இத்தலத்தில் தான் நாம் இந்த அபூர்வ காட்சியை தரிசிக்க முடியும். அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் ராமரும் சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மற்ற கோவில்களில் ராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும்.
இத்தலத்தை தரிசனம் செய்தாலே குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி என்றும் தியாக மனப்பான்மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.
அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்று (22.01.2024), கும்பகோணம் ராமசாமி கோவிலில் சீதாராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம"
"ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்"

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் நரசிம்மர்
ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் திருப்புல்லாணி. இத்தலத்து பெருமாளின் திருநாமம் ஆதிஜெகநாத பெருமாள்.பொதுவாக நரசிம்மர் மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி தருவார்ஆனால் நரசிம்மர் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இது புராதனமான கோவில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு ஆகும். இத்தலத்தில்தான் தசரத மகாராஜா குழந்தை பாக்கியத்திற்காக புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தை தன் மனைவியருக்குக் கொடுத்தார். அதன் பலனால் ராமன், லட்சுமணன், பரதன், சத்துருக்கனன் பிறந்தனர். எனவே இத்தலத்தில் பிரசாதமாக தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
திருமண வரம் , வீடு மனை யோகம் அருளும் முருகன்
கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி. இக்கோவில் இரண்டாம் நூற்றாண்டில், கரிகால சோழனால் கட்டப்பட்டது.
இக்கோவில் வெளிப்பிராகாரத்தில், முருகபெருமான் பால தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன், தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்க முனிவர் தான் இந்த பால தண்டாயுத சுவாமியை பிரதிட்டைசெய்து, இங்கு கடும் தவம் புரிந்தார் என்கிறது தல புராணம். இத்தலத்து முருகன் பற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியிருக்கிறார்
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், முருகப்பெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் . அதே போல் இக்கோவிலிலும், பால தண்டாயுதபாணி மேற்கு பார்த்த நிலையில் தரிசனம் தந்தருள்கிறார். இப்படி மேற்குப் பார்த்தபடி முருகக் கடவுள் திருக்காட்சி தரும் திருத்தலங்கள் அரிது. மேலும் மேற்குப் பார்த்த நிலையில் உள்ள முருகக் கடவுளைத் தரிசிப்பது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போல் மாதந்தோறும் வருகிற எல்லா கிருத்திகை நட்சத்திர நாளும் இங்கே விசேஷம் தான். இந்த நாளில், பேரூர் பால தண்டாயுதபாணிப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெறுகின்றன.
கிருத்திகை நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு, பேரூர் முருகப்பெருமானை தரிசித்தால், திருமண பாக்கியம் கைகூடும். அதேபோல், திருமணமான பெண்கள் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொண்டு பாலதண்டாயுதபாணியை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.
கிருத்திகை நட்சத்திர நாளில், பால தண்டாயுதபாணிக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.
கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.
இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.

திருச்சி பைரவ நாத சுவாமி கோவில்
திருச்சி மலைக்கோட்டையின் காவல் தெய்வம்
சிவபெருமானுடைய ஐந்து குமாரர்கள் விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் ஆகியோர் ஆவர். இவர்களை பஞ்ச குமாரர்கள் என்று அழைப்பர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஒரு சில தலங்களில் தான் தனி கோவில்கள் உள்ளன. அப்படி பைரவருக்கு அமைந்த அபூர்வ கோவில்களில் ஒன்றுதான் திருச்சி மாநகர பெரிய கடை வீதியில் உள்ள பைரவ நாத சுவாமி கோவில். காசியில் கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக, இந்த பைரவ நாத சுவாமி நம்பப்படுவதால் இத்தலத்தை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள். இங்கு மூலவராக அருள் பாலிக்கும் பைரவர் மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
வழக்கமாக உக்கிரமான முகத்துடன் விளங்கும் பைரவர் இங்கு சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருவறை முன் ஒளிவிட்டு சுடர் விடும் தீபம் 'பைரவ தீபம்' என அழைக்கப்படுகிறது. பகல், இரவு என நாள் பூராவும் இந்த தீபம் எரிந்து கொண்டேயிருக்கிறது. கருவறையின் முன், பைரவரின் வாகனம் சுவானம் (நாய்). உள்ளது. நாய்க்கு துன்பம் விளைவித்தவர்கள் அதனால் தோஷம் ஏற்படாமல் இருக்க, இங்குள்ள சுவானத்திற்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி, சுக வாழ்வு பெறலாம்.
மாதந்தோறும் வரும் வளர்பிறை அஷ்டமியில், பைரவருக்கு பள்ளய பூஜை எனும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று பைரவரை பூக்களாலேயே அலங்காரம் செய்வர். இங்கு மூலவரை வழிபடுவதாலும் ஹோமத்தில் கலந்து கொள்வதாலும் பக்தர்கள் இழந்த பொருளை மீண்டும் பெறுவதுடன், கடன் தொல்லை, பில்லி, சூனியம், பகைகளில் இருந்து மீள முடியும்.

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்
காணும் பொங்கலன்று மாட்டு வண்டியில் வீதி உலா வரும் திருத்தணி முருகன்
திருத்தணி முருகன் கோவிலின் உற்சவர் காணும் பொங்கலன்று, வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக இறங்கி வருவார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தர நகர வீதிகளில் உலா வருவார். திருவீதி உலா வரும் தெருக்களில் வண்ணக்கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தர்கள் முருகனை வழிபடுவர். பொதுவாக காணும் பொங்கல் அன்று பக்தர்கள் கோவிலுக்கு இறைவனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால், திருத்தணியில்
பக்தர்களுக்கு தரிசனம் தர, முருகப்பெருமானே மலையில் இருந்து இறங்கி வருவது தனிச்சிறப்பாகும்.
காணும் பொங்கல் சிறப்புகள்
பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுகக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் ’போகி’ பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்நாள் தைப்பொங்கல் கொண்டாடாப்படுகிறது. இடண்டாவது நாளில் உழவுக்கு உதவும் மாடுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம். நான்காவது நாள்தான் காணும் பொங்கல். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். காணும் பொங்கல் (கன்னி பொங்கல்) அன்று திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தமக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டுமென்று மார்கழி மாதம் முழுவதும் விரதம் எடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வது கன்னி பொங்கலாகும்.
காணும் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவிக்கு அன்னமிடவேண்டும் என்பதே சம்பிரதாயமாகும். ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும். முதல் நாள் பொங்கிய சாத்தில் மஞ்சள் பொடி, கொஞ்சம் குங்குமம் தூவி, பால் சேர்த்து , சக்கரைப் பொங்கல், தயிர் சேர்த்த சாதத்தை காகத்திற்கும் ,குருவிக்கும் படையல் வைக்க வேண்டும். 'காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்' என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும்.
காணும் பொங்கலன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் பெரும்பாலோரின் நடைமுறையாக உள்ளது. முக்கியமான பண்டிகை ஆகும். இந்நாள் பெண்களுக்கு, பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.டக்கும்.

தஞ்சைப் பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் சிறப்பு பூஜை
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். இதன் எடை 20 டன் ஆகும். இந்த நந்தியம் பெருமான், ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி ஆவார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது 108 பசுக்களுக்கு 'கோ' பூஜை செய்யப்படும். பெருந்திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மிகவும் விஷேசமான இந்த பூஜையையொட்டி, நந்திககு ஒரு டன் எடையில் காய்கறிகள், பழங்கள், பலவகை இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருத்தெளிசேரி பார்வதீசுவரர் கோவில்
சிவனும், பார்வதியும் உழவராக பணிபுரிந்து பஞ்சம் தீர்த்த தேவாரத்தலம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் தேவார தலம் திருத்தெளிசேரி. இறைவன் திருநாமம் பார்வதீசுவரர், இறைவியின் திருநாமம் பார்வதியம்மை.
ஒரு சமயம் உணவு பஞ்சம் சோழநாட்டில் சரிவர மழை பெய்யாததால் உணவு பஞ்சம் ஏற்பட்டது. நாட்டு மக்கள் பசியால் வாடினர். சோழ மன்னன் இத்தல இறைவனிடம் வேண்டினான். இதையேற்ற சிவபெருமான், பார்வதிதேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்துச் சென்றார். பயிர் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது. இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் 'திருத்தெளிசேரி' ஆனது. இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில் இத்தலத்தில் ஆனி மாதம் விதை தெளிவு உற்சவம் நடைபெறுகின்றது. இறைவனும் இறைவியும் கோவிலுக்கு எதிரே உள்ள சூரிய தீர்த்தத்திற்கு எழுந்தருளி விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். அதன் பின்னரே, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விதை தெளிப்பார்கள்.
பங்குனி மாதம் நடைபெறும் சூரிய பூஜை
சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை, சூரியனை சபித்து விட்டார். இதனால், சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீசுவரரை வழிபட்டான். இவனது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால், இதனை 'பாஸ்கரத்தலம்' என்கின்றனர். . இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றதால், ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை சூரிய பூஜை வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், அஸ்தமனச் சூரியன் தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்
அபூர்வமான ஆறடி உயரமுள்ள சூரியபகவான்
மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ளது கைலாசநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. பிரம்மதேவன் சிவனால் ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்துக்கு வந்து வழிபட்டதால், இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படடது.
பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள சூரியபகவான் சிலை மிகவும் அபூர்வமானது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம், சுவாமியின் இடப்பாகம் எழுந்தருளி உள்ளார்.
பொதுவாக சூரிய பகவான், சூரியபகவான் இறைவனின் வலப்பாகத்தில் தான் இருப்பார். இத்தகைய சூரிய பகவானை, இந்தியாவின் வேறு எந்த தலத்திலும் நாம் காண்பது அரிது.
மகர சங்கராந்தி
சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினமே மகர சங்கராந்தி ஆகும். சூரியபகவான் வான்வெளியில் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் தான் மகர சங்கராந்தி. சமசுகிருதத்தில் 'சங்கரமண' என்றால், 'நகரத் துவங்கு' என்று பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று. தமிழகத்தில் இந்நாள், பொங்கல் பண்டிகை எனவும், இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால், அறுவடை திருவிழாவாகவும், சூரியனுக்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவில்
மயூர வாகன சேவன விழா
சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பாம்பன் சுவாமிகள் கோவில். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். ராமேசுவரத்திற்கு அருகில் உள்ள பாம்பன் என்ற ஊரில் 1850 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு. சிறுவயது முதலே முருகப்பெருமானின் மீது தீவிர பக்திக் கொண்டிருந்தார். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் சுவாமிகள். இவர் முருகன் மேல் இயற்றிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 6666. இவர் தமிழ் உயிர் எழுத்துக்கள்(12), மெய்யெழுத்துக்கள்(18) எண்ணிக்கையை ஒன்றிணைத்து, இயற்றிய 30 பாடல்கள் கொண்ட 'சண்முகக்கவசம்', முருக பக்தர்களுக்கு இடையே மிகவும் பிரசித்தி பெற்றது.
இவர் வாழ்க்கையில் முருகன் புரிந்த திருவிளையாடல்கள் அநேகம். அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவர்கள் எலும்பு கூடாது என்று காலை அகற்ற நினைத்திருந்த தருணத்தில் முருகப்பெருமான் அவருக்கு காட்சியளித்து குணப்படுத்தியது பெரிய அதிசய நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியை பற்றிய ஆதாரப்பூர்வமானபதிவுகளை, இன்றளவும் நாம் சென்னை பொது மருத்துவமனையில் (ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை) பார்வையிடலாம்.
பாம்பன் சுவாமிகளுக்கு, அரசு மருத்துவமனையில் முருக தரிசனம்
சென்னை தம்புச் செட்டித் தெருவில், 27-12-1923 நாளன்று பாம்பன் சுவாமிகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு குதிரை வண்டி சுவாமிகளின் மீது மோதியதால், அவரின் இடது கால் கணுக்கால் எலும்பு முறிந்து விட்டது. இந்த விபத்தைக் கண்ணுற்ற சுவாமிகளின் அன்பர், சுவாமிகளைச் சென்னை அரசு பொது மருத்துவமனையில் 11ம் எண்ணுள்ள மன்றோ வார்டில் சேர்ந்தார். சுவாமிகள் 73 வயதுக்கு மேற்பட்டவர் என்பதாலும், உப்பு, புளி, காரம் அற்ற உணவையே உண்பவர் என்பதாலும் அவர்களின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அதனால் அறுவை சிகிச்சை செய்து காலை அகற்ற வேண்டும் என்றும் ஆங்கிலேய மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். மருத்துவமனையில் சேர்ந்த 11ம் நாள் இரவில் முருகப் பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை நல்ல வட்ட வடிவமாக விரித்து, அழகிய வானை மறைத்தும், அதன் இடப்பக்கத்தில் உடன் வந்த மற்றொரு மயிலுடன் சேர்ந்து நடனமாடிய அழகிய காட்சியைச் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட் டியருளினான். மயில்களின் கால்கள், தரையில் பதியவில்லை. அவை பொன்மய பச்சை நிறமாக இருந்தன. முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். இந்நிகழ்ச்சியை சுவாமிகள் 'அசோகசாலவாசம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்:
அம்மயூரவாகனக் காட்சியானது தன்னை விட்டு மறைதலைக் கண்டு, மீண்டும் இது போன்றொரு காட்சி எவ்வாறு கிடைக்கும் என்று நினைத்து சுவாமிகள் அழுதார். அவர் மனம் மகிழுமாறு ஓர் இரவில் முருகப்பெருமான், ஒரு சிவந்த நிறக் குழந்தை வடிவில் தோன்றி சுவாமிகள் படுத்திருந்த படுக்கையிலேயே தானும் தலை வைத்துக் காலை நீட்டிப் படுத்திருந்தான். அத்திருக்காட்சியைக் கண்ட சுவாமிகள், குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே என்று உணர்ந்ததும் முருகப்பெருமான் மறைந்துவிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்,அவரது முறிந்த கால் எலும்பு கூடிவிட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர் இவரை சோதித்து, 'உணவில் உப்பை முற்றிலும் நீத்த தங்களின் கால் குணமாகியது பெரும் வியப்பாக உள்ளது' என்று அன்புடன் கூறினார். இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்தார்.
முருகப்பெருமான் திருவருளால், 11ம் நாள் இரவு (6-1-1924) வளர்பிறைப் பிரதமை திதியும், பூராட நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலே பூரண குணம் பெற்றார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் அவர் அடியார்கள், ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்கு மயிலும், முருகப்பெருமானும் காட்சிக் கொடுத்த 100-வது ஆண்டு மயூர வாகன சேவன விழா, 10.1. 2024 முதல் 12.1.2024 வரை, மூன்று நாட்கள் திருவான்மியூர், பாம்பன் குமரகுருபர சுவாமி கோவிலில் கொண்டாடப்பட்டது..

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
கவியரசர் கம்பருக்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடல்
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண், ஆண்டாள் நாச்சியார். அவர் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். பெருமாளின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமி பிராட்டியின் அம்சமாக அவதரித்தவர்ஆண்டாள் நாச்சியார். ஸ்ரீரங்கம் ரங்கநாதனுக்கு சூட்ட வேண்டிய பூமாலையை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள்.
இக்கோவிலில் நடைபெறும் 'மார்கழி நீராடல்' உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது. அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை 'மார்கழி நீராடல்' உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ' என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, 'எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும். ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்' என்று பதில் அளித்தனர்.
உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, 'இதுவா பாருங்கள்?' என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். 'ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?' எனக் கேட்டனர். கம்பர். 'திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!' என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.
கூடாரவல்லித் திருநாள்
மார்கழி மாதம் 26 நாட்க பாவை நோன்பிருந்த ஆண்டாள், அரங்கநாதனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில் அவருடன் இரண்டறக் கலந்தாள்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்
தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். 1500 ஆண்டுகள் பழமையானது. நாமக்கல் கோட்டைக்கு கீழே, நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் விக்கிரகங்களில் இதுவும் ஒன்று. அவரது திருமேனி, பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ராமாயண காலத்தில், சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக ஆஞ்சநேயர், இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, நல்ல ஒழுக்கம், நற்பண்புகள் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும்.

கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில்
பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக ஒரு காது பெரிதாக உள்ள நந்தி
சிம்மபுரீசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டத்திலுள்ள கருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிம்மபுரீசுவரர் என்றும், அம்பிகை குந்தாளம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் சிம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் குந்தாளம்பாள். நரசிம்மர் பூஜை செய்து பாவம் விலகப்பெற்ற தலம் கருப்பத்தூர். இங்குள்ள இறைவன் நரசிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டு பின் சிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படலானார்
இத்தலத்து நந்தியம் பெருமான் ஒரு காதில் பெரிய துவாரமும், மற்றொரு காதினை மூடியவாறும் இருக்கிறார். இவரிடம், பக்தர்கள் தங்களின் குறைகளைச் சொன்னால், இறைவனிடம் அக்கோரிக்கைகளை நந்தி கூறுவார். இரணியனை கொன்ற பாவம் நீங்க, நரசிம்மர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டார். சிவபெருமான் நரசிம்மரைப் பார்த்து, 'இரணியவதம் செய்ததால் ஏற்பட்ட ரத்தக்கறை, பாவம் இரண்டும் நீங்கப் பெற வேண்டும் என நந்தியின் காது வழியே கூறு. அவைகள் நீங்கிப் பெறுவாய் ' எனக் கூற அதன்படியே நந்தியின் காதில் நரசிம்மர் கூறி, பின் பாவ விமோசனம் அடைந்தார். எனவேதான், பக்தர்கள் இத்தலத்து நந்தியின் மூலம், தங்கள் கோரிக்கைகளை இறைவனிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்
பாலகனாக, ஆண்டி கோலத்தில் காட்சி தரும் முத்துக்குமாரசாமி
திருப்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில். கொங்கு நாட்டின் புகழ்பெற்ற முருகன் தலங்களில் இதுவும் ஒன்று. 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் மிகவும் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு, நடந்து செல்ல 300 படிக்கட்டுகள் உள்ளன. வாகனத்தில் செல்ல சாலை வசதியும் உண்டு. அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் 'அலகு மலை' என்று அழைக்கப்படுகிறது.
கோவில் கருவறையில், முருகன் நான்கரை அடி உயர திருமேனியுடன் பாலகனாக, பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி காட்சி அளிக்கின்றார். மூலவர் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கண்களை சற்றே தாழ்த்திய நிலையில் ஞானகுருவாக அருள்புரிகிறார். வள்ளியும், தெய்வானையும் தனி சந்ததியில் காட்சி தருகிறார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளுக்கான தனிச் சன்னதிகள் இக்கோவிலில் உள்ளன. ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
சிவபெருமான் கேள்விக்கு முருகன் அளித்த சமயோசித பதில்
ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, 'இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முருகப்பெருமான், 'அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை' என்று முருகப்பெருமான் சமயோசிதமாக பதில் கூறினார். அதாவது 'அறன்மாதா' என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. 'அறம் வளர்த்த நாயகி' என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் 'உயிர்களை காக்கும் நீர்' என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.
திருமணம் கைகூட முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம்
திருமணத்திற்கு காலதாமதம் ஆகும் ஆண் பெண்கள், இந்த முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம் செய்தால், நல்ல மணவாழ்க்கை அமையும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார்.

நல்லாத்தூர் பொன்னம்பலநாதர் கோவில்
சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம் தரும் சிவபெருமான்
கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது பொன்னம்பலநாதர் என்கிற சொர்ணபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சாளரக் கோவில் வகையைச் சேர்ந்தது. இத்தகைய கோவில்களில் கருவறைக்கு எதிரில் வாசல் கிடையாது. மூலவரை பலகணி என்னும் கருங்கல் ஜன்னல் (சாளரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். சாளர சக்கரத்திற்கு கீழ் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் உள்ளடக்கிய சர்ப்ப யந்திரம் உள்ளது. துவாரபாலகர்களை எந்த ஒரு கோவிலிலும் வலம் வர முடியாது. ஆனால், இங்கே வலம் வரலாம். மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
ஆங்கிலேய கலெக்டர், தன் மகளுக்கு கண்பார்வை கிடைத்ததற்கு, காணிக்கையாக கொடுத்த ஆலயமணி
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 120 ஆண்டுகளுக்கு முன்னர், கடலூர் (அப்போதை தென்னாற்காடு மாவட்டம்) கலெக்டராக பணிபுரிந்தவர் பகோடா என்பவர். அவரது மகள் கண்பார்வையற்று இருந்தார். இவ்வாலயத்தில் தரிசனம் செய்ததால் அந்த சிறுமிக்கு கண்பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ந்த ஆங்கிலேய கலெக்டர் பகோடா நஞ்சை நிலங்களை ஆலயத்திற்கு வழங்கினார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட அற்புத ஓசையுடன் கூடிய ஆலயமணியை 1907ம் ஆண்டு இந்த கோவிலுக்கு வழங்கினார். இந்த மணியின் ஓசை குறைந்தது 3 கி.மீ தொலைக்கு கேட்கும் என்பது கூடுதல் சிறப்பு.
பிரார்த்தனை
இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண (ஆடி), உத்ராயண (தை) புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து வழிபடுவது நல்ல பலன் தரும். பிதுர் தோஷத்திற்கான பரிகார தலம் இது.